இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, February 22, 2008

பைபிளும்,திருவள்ளுவரும்

எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்

valluvar.jpg VS solomon.jpg

திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் அடக்கிய ஞானி அவர்.

.
ரோமக் கவிஞர் ஓவிட் என்பவர் ( 43 BC - 18 AD ) மட்டுமே அவருடைய காமத்துப் பாலை கொஞ்சம் ஒத்து எழுதியவர். கன்பூசியஸ் சில இடங்களில் ஒத்துப் போகும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார், அதைத் தவிர்த்தால் அறத்துப் பால், பொருள் பாலைப் பொறுத்தவரை திருவள்ளுவர் தனிக்கொடி நாட்டியவர் தான்.
நிற்க.,

கிமு 970 - 928, காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர் சாலமோன். கடவுளிடம் ஞானம் வேண்டிப் பெற்றவராக, சிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப் படுவவர் தான் சாலமோன். அந்தக் காலத்தில் எருசலேமை தலைமையாகக் கொண்ட யூதா மற்றும் இஸ்ரேல் நாடுகளை நாற்பது ஆண்டுகள் ஆண்டவர் தான் சாலமோன்.

.

தன்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் வாழ்வே மாயம் என்று பல்டிக் கொள்கைகளை அடித்தாலும், முதல் பாதியில் அருமையான நீதிமொழிகள் தந்திருக்கிறார்.
இங்கும் நிற்க.,

இரண்டு வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட இடங்களில், வேறுபட்ட மொழிகளில் வாழ்ந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இருந்தாலும் திருவள்ளுவருடைய சிந்தனைகள் பல இடங்களில் தன்னைவிட பத்து தலைமுறைக்கு முந்தியவரான சாலமோனின் சிந்தனைகளைக் நிறைய இடங்களில் உரசிச் சென்றிருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம்.

 சாலமோனின் எபிரேய மொழிச் சிந்தனைகளை, நம் தமிழ் நாட்டு வள்ளுவர் உள்வாங்கினாரா ? இல்லை இவை இணைச் சிந்தனைகளா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் முடிவு செய்ய முடியும்.

சில முக்கியமான உதாரணங்களைக் கூறவேண்டுமென்றால்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

நீதி மொழி : 25 : 21,22  ல் சாலமோன் இதையே, எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. என்கிறார். இவ்வாறு செய்வதால் நீ அவன் தலையில் எரி தழலைக் குவிப்பாய்.

புறம் தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இந்தக் குறளும், நீ.மொ 27: 19 - ல் சாலமோன் குறிப்பிடும்,
" நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார், தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார் "
என்பதும் ஒத்த சிந்தனையைச் சொல்கின்றன.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

 - தகுதிடையவரின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பினும், சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவது அரிதாகும். எனும் குறளும்

நீ.மொ. 10 :4 , வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும், விடாமுயற்சியோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீ.மொ. 13 :14 , சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள் உணவோ இல்லை
நீ.மொ 20.4 , சோம்பேறி பருவத்தில் உழுது பயிரிட மாட்டார், அவர் அறுவடைக்காலத்தில் விளைவை எதிர் பார்த்து ஏமாறுவார்.
 என்றெல்லாம் சோம்பேறிகளின் நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக நீ.மொ. 19:24 ல், சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார், ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போக சோம்பலடைவார். என்று மிகைப்படுத்தி முத்தாய்ப்புக் கருத்துக்களை வைக்கிறார்.

வேலொடு நின்றான் இடுவென் றுதுபோலும்
கோலோடி நின்றான் இரவு.

 ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக் காரனின் மிரட்டலைப் போன்றது.

வள்ளுவரின் இதே கருத்து ,

(நீ. மொ 28:15) கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும், இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.

(நீ.மொ. 28:16 ) அறிவில்லாத ஆட்சியாளன் குடிமக்களை வதைத்துக் கொடுமைப் படுத்துவான்.

( நீ.மொ. 29:4 ) நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும். அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.

என்றெல்லாம் சாலமோன் வாயால் கூறப்பட்டிருக்கிறது.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்  கெல்லாம் இனிது

 - பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

இதை சாலமோன் மிகச் சுருக்கமாக, (நீ.மொ. 10:1) - ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரம் வருவிக்கின்றனர் எனக்குறிப்பிட்டு, பின்

(நீ.மொ 23 : 25 ) - இல், நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக, உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக என்று அறிவுரையும் வழங்குகிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.( 70 )

 - ஆஹா, இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்

 - நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள்
 
போன்ற குறள்களைக் கூட இங்கே குறிப்பிடலாம்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
( 1075 )

 - தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தில் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

நீ.மொ. 10 :13 இதே கருத்தைச் சொல்கிறது.
அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ( 543 )

 ஓர் அரசின் செங்கோன்மை தான் அறவோன் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

(நீ. மொ. 20.8 ) மன்னன்  நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான் என்கிறார் சாலமோன்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284 )

 களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்மத்தை உண்டாக்கும்.

( நீ.மொ. 21 :7 ) பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களை பாழடித்து விடும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு ( 288 )

 நேர்மையுள்ளவன் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்கு வழியான வஞ்சக வழியில் செல்லும்.

(நீ.மொ. 12 : 20 ) சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
(நீ.மொ 12 : 17 ) உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவர், பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ( 100 )

 -இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

(நீ.மொ : 15:1 ) கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக் கால்
ஊராணமை மற்றதன் எஃகு ( 773 )

 - பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆன்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் போற்றப்படும்.

( நீ.மொ. 25 : 21 ) - எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு, தாகமாயிருந்தால் குடிக்கக் கொடு.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ( 44 )

 - பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தேன் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

( நீ.மொ. 22:9 ) கருணை உள்ளவன் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பான், அவரே ஆசி பெற்றவர்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று ( 259 )

 - நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரப் போக்காமலிருப்பது உயர்ந்தது.

( நீ.மொ. 21:3 ) - பலி செலுத்துவதை விட நேர்மையும் நியாயமுமாக இருப்பதே ஆண்டவருக்குப் உவப்பளிக்கும்.

இந்தக் குறள் அப்படியே அதன் பொருளை பிரதிபலிக்காவிட்டாலும், பலி செலுத்துவதை விடச் சிறந்தது நேர்மை நியாயம் என்று சாலமோன் குறிப்பிடுகிறார், வள்ளுவர் அதை மிருக வதைக்காக பயன் படுத்துகிறார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ( 400 )

 - கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

( நீ.மொ .16:16 ) பொன்னை விட ஞானத்தைப் பெறுவதே மேல், வெள்ளியை விட உணர்வைப் பெறுதலே மேல்.
( நீ.மொ 3 : 13 ) - இலும், மேற்கூறிய பொருளே கூறப்படுகிறது.
(நீ.மொ : 8 : 11 ) பவளத்திலும் ஞானமே சிறந்தது, நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

இந்தக் குறள் சாலமோனின் செய்தியை அப்படியே சுமக்கிறது, தரம் குறையாமல்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் ( 649 )

 - குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள், பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

( நீ. மொ : 17: 27 ) தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி, தம் உணர்ச்சிகளை அடக்குபவரே மெய்யறிவாளர்.

நாவடக்கம் பற்றி சாலமோன் மேலும் நிறைய விளக்கங்கள் தருகிறார்,

(நீ.மொ 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவனாய் கருதப் படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.

(நீ.மொ 17 : 14 ) வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்து விடுதல் போலாகும்: வாக்குவாதம் மேலும் வளரும் முன் அதை நிறுத்திவிடு.
( நீ. மொ 18 : 7 ) மதிகேடர் பேசத்துவங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடி வாங்கித் தரும்.
( நீ. மொ 18 : 20 ) ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும்.
(நீ.மொ 18 : 21 ) வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

வகையறிந்து வல்லமை வாய்சேரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ( 721 )

 - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

 எனும் குறளும் இங்கே ஒப்பிடத் தக்கதே.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்


( நீ.மொ : 15 :22 ) எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும், பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
( நீ.மொ 19 : 2 ) எண்ணிப் பாராமல் செயலில் இரங்குவதால் பயனில்லை, பொறுமையின்றி நடப்பவர் இடறி விழுவார்.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின் ( 272 )

 - தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவன், துறவுக் கோலத்தால் அடையும் பயன் ஒன்றுமில்லை

( நீ.மொ 19 :1 ) முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றும்
நாமம் கெடக்கெடும் நோய் ( 360 )


 - விருப்பு வெறுப்பு, அறியாமை இவை இல்லாதவர்களை துன்பம் அண்டாது

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் ( 553 )

 - ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்துகொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
( நீ.மொ : 29: 4 ) நேர்மையானவன் ஆட்சி அமைத்தால் மக்கள் மகிழ்ச்சியோடிருப்பர், பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பர்.
( நீ. மொ 29 :12 ) ஆட்சி செலுத்துகிறவன் பொய்யான செய்திகளுக்கு செவிகொடுக்கிறவராயின், அவருடைய ஊழியரெல்லாம் தீயவர் ஆவார்.
( நீ.மொ 14 : 34 ) நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார் ( 719 )

 - நல்லோர் நிறந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றோர், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.

( நீ. மொ : 16 :19 ) - மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொடுளை பகிர்ந்து கொள்வதை விட, மனத் தாழ்ச்சியோடு சிறுமைப்பட்டவர்களோடு கூடி இருப்பது நலம்.

இந்த குறளும், நேரடியான பொருளைச் சொல்லவில்லை எனினும், இதுவும் அதனை ஒத்த ஒரு நேர் சிந்தனையே.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் ( 979 )

 - ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும், ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

( நீ. மொ : 22:9 ) - கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர், அவரே ஆசி பெற்றவர்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் ( 111 )

 - பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒரு தலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலமை எனும் தகுதியாகும்.

( நீ.மொ: 28 : 21 ) - ஓரவஞ்சனை காட்டுவது நல்லதல்ல.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும் ( 911 )

 - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுபவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

(நீ.மொ : 2:16)   ஞானம் உன்னை கற்பு நெறி தவறிவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்
(நீ.மொ : 2:18)    அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, அவளின் வழிகள் இறந்தோரிடத்துக்குச் செல்கின்றன.
(நீ.மொ : 2:19) அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவர்கள் மீண்டும் அடைவதேயில்லை.
(நீ.மொ : 6:24)  (அறிவுரை, ) உன்னை விலைமகளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயந்தூக்கி நள்ளா விடல்.( 912 )

பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று ( 913 )

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி நவர் ( 914 )

பொது நலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி நவர் ( 915 )

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் ( 916 )

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் ( 917 )

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு ( 918 )

வரைவிலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு ( 919 )

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( 920 )

0

உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கண்டொழுகுவார் ( 921 )

 - மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார் ( 922 )

 
 - மது அருந்தக் கூடாது, சான்றோரின் நன்மதிப்பு தேவையில்லை என்போர் மட்டும் அருந்தலாம்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு ( 924 )

 
 - மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

( கள்ளுண்ணாமையில் வள்ளுவர் - குறள்கள் 930 வரை )

பெரும்பாலான அறிவுரைகள் நீதிமொழிகளில் காணப்படுகின்றன.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுவாஞ்சொல் இன்மை அறிந்து ( 645 )

 - இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

( நீ.மொ : 25 :8 ) ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் வழக்கு மன்றத்துக்குப் போகாதே : நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்போது நீ என்ன செய்வாய் ?
( நீ. மொ 25 : 11 ) தக்க வேளையில் சொன்ன ஒரு சொல், வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.( 427 )

 - ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படி இருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

( நீ.மொ: 27:12 ) எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகி மறைந்து கொள்வான், அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு ( 467 )

 - நன்றாக சிந்தித்த பின்பே செயலில் இறங்க வேண்டும், இறங்கியபின் சிந்திக்கலாம் என்பது தவறு.

என்னும் குறள் கூட இந்த நீதி மொழியோடு ஒப்பிடத் தகுந்ததே.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும் (114 )

 - ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதை அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்சொல்லைக் கொண்டோ  அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

( நீ.மொ : 20 :7 ) எவர் களங்கமற்ற நேர் வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவர் காலத்துக்குப் பின் நல்ல பெயர் பெறுவார்கள்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் ( 430 )

 - அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

( நீ.மொ: 3 : 35 ) ஞானமுள்ளோர் தங்களுக்குள்ள பெரும் மதிப்பைப் பெறுவார்கள், அறிவிலிகளோ இழப்பார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு ( 963 )

 - உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும் அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும் ( 283 )

 கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.

( நீ. மொ ; 20 :17 ) வஞ்சித்துப் பெறும் உணவு முதலில் சுவையாய் இருக்கும் பின் அது வாயில் மணல் கொட்டியது போலாகும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை ( 758 )

 - தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்காமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்றுக் காண்பதைப் போன்றதாகும்.

( நீ.மொ : 18 : 11 ) செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும், உயர்வான மதில் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு ( 752 )

 - பொருள் உள்ளவர்களை புகழ்வதும், பொருள் இல்லாதவரை இகழ்வதும் தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

( நீ.மொ : 14 : 20 ) ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர், செல்வர்க்கோ நண்பர் பலர் இருப்பர்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( 688 )

 - துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

( நீ.மொ : 13 : 17 ) தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார், நல்லதூதரோ அமைதி நிலவச் செய்வார்.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு ( 849 )

 - அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான், அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

( நீ.மொ : 18 :2 ) மதிகேடர் எதையும் அறிந்துகொள்ள விரும்ப மாட்டார், தம் மனதிலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.( 184 )

 - நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பாராமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுதல் தவறு
( நீ.மொ : 18 : 8 ) புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உணவை உண்பது போல, அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி ( 226 )

 - பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதை விட ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

( நீ. மொ : 22 :9 )  கருணை உள்ளவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்.
( நீ. மொ: 28 : 27 ) ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது, அவர்களைக் கண்டும் காணாதது போல இருப்போர் சாபங்களுக்கு ஆளாவார்.

உடம்போடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று ( 890 )

 - உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடி வாழ்வது ஒவ்வொரு நொடியும் அச்சம் கொள்ளத்தக்க விதமாய், ஒரு சிறு குடிலினுள் பாம்புடன் வாழ்தல் போன்றதாகும்.
( நீ. மொ : 21 : 9 ) மாடிவீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதை விட சிறு கிடிசை வாழ்க்கையே மேல்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ( 127 )

 - ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல்  அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

( நீ.மொ : 12:13 ) தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர், நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை ( 657 )

 பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதை விட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

( நீ. மொ : 16 : 8 )  தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளை விட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ( 1 )

 - அகரம் எழுத்துக்களுக்கும், ஆதி பகவன் உயிர்களுக்கும் முதன்மை.

( நீ. மொ : ) தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின் ( 403 )

 - கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள் கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
( நீ. மொ : 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானி என்றே கருதப்படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ( 118 )

 - ஒருபக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் வழங்குதலே சிறந்தது.

( நீ.மொ 11 :1 ) கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது, முத்திரைப் படிக்கல்லே அவர் விரும்புவது.
(நீ. மொ : 20 :10 ) பொய்யான எடைக் கற்களையும், பொய்யான அளவைகளையும் பயன்படுத்துகிறவர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.
 
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதிவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து ( 112 )
 
 - நடுவு நிலையாளன் செல்வத்துக்கு அழிவில்லை. அது வழி வழித் தலை முறியினருக்கும் பயன் அளிக்கும்.

( நீ. மொ 13 :22 ) நல்லவருடைய சொத்து அவருடைய மரபினரைச் சேரும் !

நீதியாய் இருக்கவேண்டும் என்று மேலும் நிறைய இடங்களில் சாலமோன் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில :-

( நீ.மொ . 11 : 31 ) நீதியாளன் இவ் வுலகிலேயே கைம்மாறு பெறுவான்.
( நீ.மொ 12 : 28 ) நேர்மையாளனின் வழி வாழ்வு தரும். முரணானவனின் வழி சாவில் தள்ளும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( 113 )

 நடுவு நிலமை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மை தரக் கூடியதாக இருப்பினும் அந்தப் பயனை கைவிட்டு நடுவு நிலமையைத் தான் கடைபிடிக்க வேண்டும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி ( 115 )

 ஒருவர் வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுவு நிலையாக இருப்பதே பெரியோற்க்கு அழகாகும்.

கற்றதனால் ஆயபயன் கொல் வாலறிவான்
நற்றான் தொழார் எனில் ( 2 )

 - தன்னைவிட அறிவில் பெரியவர் முன் பணிவோடு நிற்காதவற்கள் கற்ற கல்வியினால் பயன் இல்லை .

( http://www.maraththadi.com/article.asp?id=1741 )

 ஓர் ஆழமான அலசல் நிகழ்த்தப்படுமானால் இன்னும் பல சுவாரஸ்யமான ஒற்றுமைகளும், வரலாற்று உண்மைகளும் வெளிவரக் கூடும்.

 

http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்