இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, September 6, 2008

இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

 
     
 
 
 
கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?


பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.


1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ""குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.


ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.


அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, ""இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?'' என்று கேட்டார்.


அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.


இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.


இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.


இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.


சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?


இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.


கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்தலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

 

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.


மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.


இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே ""இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்'' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ""ஜிந்தகிஇநவ்'' என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.


கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?


பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.


மறுபுறம், இந்திய வரலாற்றில் "இஸ்லாமிய ஆட்சி' என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் "உயர்சாதியினர்' என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் "கீழ் சாதியினர்' என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.


இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் ""முன்டாகாப் அல்தாவாரிக்'', மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் ""தாரிக்இஃபிரோஸ் ஷாஹி'', குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

 

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் "கீழ்' சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


""குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!'' இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது ""சிராஜுல் ஹேதயா'' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.


மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை ""மனுவாதிகள்'' என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.


"மாபெரும்' மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது ""முன்டகாப்அல்தாவாரிஹ்'' நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட ""ஃபடாவாஇஆலம்கிரி'' என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் "கீழ்' சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.


பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட ""டெல்லி உருது அக்பர்''இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; "கீழ்' சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தின் "பொற்காலம்' என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்"பொற்கால' ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த "கீழ்' சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.


பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் ""ராஜா'' என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.


சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட "மேல்' சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் "கீழ்' சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.


கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த ""மனுவாதி உலேமாக்கள்'' என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?


பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் "புனித' மற்றவர்களாக "அசுத்த'மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது ""இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' நூலில் குறிப்பிடுகிறார்.


கேள்வி: "இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த "மேல்' சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?


பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். ""ஜிந்தகிஇநவ்'' இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.


சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற் றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.


ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.


ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், ""சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது'' என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.


18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது ""ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா'', ""ஃபிக்இஉமர்'' ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ் க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.


தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். ""தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்'' என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!


தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட ""ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்'' என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.


அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு "கீழ்' சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே "மேல்' சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.


தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். ""மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்'' என்ற தமது நூலில் அவர், ""முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது'' என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் ("மேல்' சாதி) என்றும் அர்ஸல் ("கீழ்' சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, ""நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், "கீழ்' சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!


இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது ""அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்'' நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் ""நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி ""வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்'' என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் ""ஜுலாஹா'' என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (""உதவி செய்பவர்கள்'') என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.


இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.


ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் "மசாவத்இ பகார்இ ஷாரியத்'' என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி ""பாஹிஸ்டி ஜேவார்'' என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் "மரியாதைக்குரிய மேல்குடி' (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் "கீழ்' சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் ""இம்தாத் உல்ஃபடாவா'' என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.


இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை ""நவ்முஸ்லிம்கள்'' என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்.
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்